Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அம்மா தான் என்னுடைய ரொல்மோடல்....


சக்தி தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது  வசந்தம் டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும்  அர்ச்சனாவின் நேர்காணல்

 நேர்காணல்:
 எஸ்.ரோஷன்

பாடசாலை காலங்களில் நான் இலக்கியத்தில் பெரும் நாட்டம் கொண்டவள். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வந்தேன்.  அப்படியிருந்தும் தற்போது ஒரு எழுத்தாளராக வருவதற்கு ஒரு சந்தர்ப்பம் இல்லாது போவிட்டது. இருந்தும் ஒரு அறிவிப்பாளராக புகழ்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் சக்தி தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது  வசந்தம் டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும்  அர்ச்சனா.
இந்த வார உதயசூரியனில் உங்களுடன்...


ஹா வணக்கம். நான் குடும்பத்தில் ஒரே ஒரு செல்லப்பிள்ளை.  என் சொந்த இடம் யாழ்ப்பாணம். பாடசாலை காலத்தில் பரதநாட்டியம், நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு பல வெற்றிகளை  பெற்றிருக்கிறேன்.  உயர் கல்வியை கொழும்பில் படித்துக்கொண்டு இருக்கும் போது சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் தேவை என்ற விளம்பரம் பார்த்து விண்ணப்பித்தேன். எனது முதல் நிகழ்ச்சியான ஆனந்த இல்லம் நிகழ்ச்சி  2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதைப் பெற்றது.
பின்னர்  சக்தி தொலைக்காட்சியில் பெண்மணிக்காக, சந்திப்போமா, சக்தி சட், குட்மோனிங் சிறிலங்கா, பிரியமான தோழியே ஆகிய நிகழ்ச்சிகளை  ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் தொகுத்து வழங்கினேன்.
தற்போது வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருப்பதுடன் தலைவாசல் என்ற காலை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றேன்.
* அறிவிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான்  இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
அறிவிப்பாளர் தொலைக்காட்சியில் தன்னை எல்லாம் தெரிந்த விற்பனர்  என நினைத்து தனது கருத்துகளை மக்களுக்கு திணிக்கக் கூடாது. ஏன் என்றால் மக்களுள் ஒருவராக நேயர்களுடன் சினேக பூர்வ கருத்தாடலை மேற்கோள்ள வேண்டும். மற்றவர்களின் மாதிரிகளைப் பின்பற்றாமல் தனித்துவமான பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கலாம்.
*இலங்கையில்/ இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
வானொலியிலும் தொலைக்காட்சியிலும் எனக்குப் பிடித்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்தான். இவரின் குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் நேர்த்தியான நிகழ்ச்சித் தொகுப்பும் பிரமிக்கத்தக்கது.
*நீங்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
விஜ டி.வி.தான்  நான் விரும்பிப் பார்ப்பது. காரணம் விஜ டி.வி.யின் நிகழ்ச்சிகள் பிரமாண்டமாகவும் சுவாரஷ்யமாகவும் சமுகத்துக்கு தேவையான நல்ல கருத்துகளை முன்வைக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகின்றார்கள். அதில் நீயா நானா என்ற நிகழ்ச்சி ரொம்பப் பிடிக்கும். அதன் தொகுப்பாளர் கோபிநாத் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், பத்திரிகையாளர் அதுமட்டுமல்ல நல்ல எழுத்தாளரும் கூட, அதற்குச் சான்றாக ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, தெருவெல்லாம் தேவதைகள், நேர் நேர் தேமா ஆகிய புத்தகங்களை எழுதி உள்ளார்.
*உங்களுடைய ரோல் மொடல் யார்?
எனது ரோல் மொடல் என் அம்மா தான். அம்மாவைப் போல், தன்னம்பிக்கையை துணையாகக் கொண்டு வாழ்க்கையில் சாதித்தவரை இது வரைக்கும் நேராக நான் கண்டதில்லை.
*உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர்,  நடிகை யார்?
நடிகை ஸ்னேகாவின் அழகும் நடிப்பும் ரொம்பப் பிடிக்கும். அவர் நடித்த பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் போன்ற திரைப்படங்கள் என்றும் ரசிக்கக் கூடியவை. நடிகர்களில் ரஜனிகாந்தின் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அவரைச் சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற பழைய திரைப்படங்களும் பிடிக்கும்.
*சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது?
சமீபத்தில் நான் பார்த்து, ரசித்து, வியந்த படம் நான் ஈ தாங்க... நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட கதை அம்சம் கொண்ட படம். நடிகர்களின் நடிப்பு, இசை, பாடல் எல்லாமே சிறப்பு. சாதாரணமாக ஈயை அடித்து கொல்பவர்களும் இந்த படத்தைப் பார்த்து ஒரு ஈக்காக அழுதார்கள்.
*வாழ்வில் மறக்க நினைப்பது எது?
வாழ்வில் மறக்க நினைப்பது போரும், அது தந்த மனக் காயங்களையும் கண்ணீரையும் எனது வாழ்வில் மறக்க நினைக்கின்றேன்...
*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ?
என் தா மண்ணான யாழ்ப்பாணத்தில் இருந்து தொகுத்து வழங்கிய சந்திப்போமா நிகழ்ச்சி. மற்றையது சந்திப்போமா நிகழ்ச்சிக்காக பூண்டுலோயாவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அந்த பாடசாலையின் இடைவேளை நேரத்திற்கான மணி அடித்ததும் மாணவர்கள் அனைவரும் என்னிடம் ஓடி வந்து  சுற்றிவளைத்துக்கொண்டு ஓட்டோகிராப் கேட்டது என்றும் மறக்க முடியாது.
*உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
எனது பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது, மற்றும் இணையத்தளத்தில் சமையல் குறிப்புகளை பார்த்து சமைத்து பார்ப்பது.
* திருமணம் எப்போது...?
வீட்டில் பார்த்துக்கொண்டிருக்காங்க... மிக விரைவில் டும் டும் டும் தாங்க...
*உங்களுடைய பிளஸ், மைனஸ் என்ன?
 பிளஸ் முதல் சந்திப்பிலேயே என்னை எல்லோரும் ஸ்னேகிப்பது.
   மைனஸ்  முன் கோபம். அதை விட கொடுமை
    அந்த கோபமும் கொஞ்ச நேரம் தான்.

*உங்களுக்கு பிடித்த சாப்பாடு?
அம்மா சமைக்கிற சாப்பாடு எது என்றாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
*அடிக்கடி எந்தப் பொருளை மறப்பீர்கள்?
நான் அடிக்கடி மறக்கும் பொருள் என்றால் பேனை தாங்க. அது கிடைக்காட்டி யாரிடமாவது கேட்டுவாங்கி எழுத மாட்டேன். மீண்டும் ஒரு புதிய பேனையை வாங்கிடுவேன்.
*நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
 தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிற மனிதர்கள் தங்களையே தொலைத்து விடுவார்கள் என்ற ஒஷோவின் தெளிவான பார்வை எல்லோருக்கும் தெளிவைத் தரும். தத்துவங்கள் என்றாலே, அவை தளர்ந்து போனவர்களுக்குத்தான் என்கிற தவறான கருத்தைத் தகர்த்து, வாழ்வியலின் வலிமையே தத்துவம் என்கிற புதிய பார்வையோடு எதையும் அணுகிய ஒஷோவைப் பிடிக்கும்.
* நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
போட்டியும் சவால்களும் நிறைந்ததுதான் ஊடகம்.  பெண்கள் ஊடகத்துறைக்கு வந்து பிரபல்யம் அடைவதை மட்டும் சாதனையாக எண்ணாமல், தனிப்பட்ட வாழ்விலும் சிறந்து நற்பெயருடன்  வாழவேண்டும்.

லிட்டில் சங்ககார சாருஜன்....



லிட்டில் சங்கக்கார சாருஜனின் நேர்காணல்....

நேர்காணல்:
எஸ்.ரோஷன்


வெறும் ஆறே வயது தான்.
 உலக கிரிக்கெட் பிரபலங்கள் பலர்
இவருக்கு அறிமுகம்!
இலங்கை கிரிக்கெட்
அணியினரின் செல்லப்பிள்ளை!
கிரிக்கெட் வீரர்களதும் வர்ணனையாளர்களதும் ஆச்சரியமான பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
யூ டியூப்பில்
 இவரது  வீடியோ மிகப்  பிரபலமாக பார்க்கப்படுகிறது.
யாராவது உலகப் பிரபலங்களின் மகனாக இருந்தால், அல்லது தலைசிறந்த கிரிக்கெட்
வீரரின் வாரிசாக இருந்தால் சிலவேளை இந்தப் புகழும் பெருமையும் இலகுவாக கிடைத்திருக்கக்  கூடும்.
ஆனால் சாதாரண ஒரு சிறுவனுக்கு அதிலும் இலங்கையில் ஒரு தமிழ்ச் சிறுவனுக்கு கிடைத்திருக்கிறதென்றால் அது பெரும் ஆச்சரியம்தான்.
ஆம் இந்த ஆச்சரியத்திற்குரிய , பாக்கியத்திற்குரிய சிறுவன் சாருஜன். நடுத்தர குடும்பத்தைச்  சேர்ந்தவர், அப்பா கிரிக்கெட் ஆர்வமுள்ளவர். புகைப்படக் கலைஞர். சாருஜன் கொழும்பு15 இல் வசிக்கிறார்.
சாருஜனை அவரது தந்தையின் வர்த்தக நிலையத்தில் சந்தித்தோம். மழலைக்கே உரிய குணத்தோடு    சாருஜன் வெட்கப்பட அவரது தந்தை சண்முகநாதன் சாருஜன் பற்றிச் சொல்கிறார். முகத்தில் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட பெருமிதம்.
சாருஜன் பிறந்து 10 11 மாதத்தில் அவரது கிரிக்கெட் ஆர்வம் வெளிப்பட தொடங்கி விட்டது. அவர் விளையாட கேட்பது எல்லாமே போல் தான்.  மற்ற குழந்தைகளைப் போல் எதண வேணும் விளையாட்டு சாமான் வேணும் என்று கேட்கமாட்டார். . எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
 எனக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம்.  சாருஜனுக்கு இரண்டு வயது இருக்கும் போது கு.கு.இ மைதானத்தில் இலங்கை, இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பார்க்க கொண்டு போயிருந்தோம். சின்னக் குழந்தையைக் கொண்டு போறோமே அங்கே அழுது அடம்பிடித்தால் என்ன செய்வது. நான்கைந்து மணிநேரம் எப்படி பொறுமையாக இருப்பான் என்றெல்லாம் யோசித்தபடிதான் அவரைக் கொண்டு போனேன். ஆனால் சாருஜன் அமைதியாக ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை ரசித்ததைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.  திரும்பி வீட்டுக்கு வருகின்ற போது ““ அப்பா அவங்க காலில போட்டு இருக்கிறது மாதிரி வேணும் என்று கேட்டார்.
 இவருடைய அளவுக்கு பேட் எடுக்கிறது அவ்வளவு சுலபமில்லையே. அதனால வீட்டில இருந்த அங்கர் மட்டையை எடுத்து காலில் கட்டி விட்டேன். அதன் பிறகு எங்கள் வீடே சாருஜனின் சிறு மைதானமாகிப் போனது.
அங்கர் மட்டையைக் கட்டிக் கொண்டு எந்நேரமும் கிரிக்கெட் விளையாடுவார். வளரவளர இவர் ரைட் சைட்டில் பந்து வீசுவதையும், லெப்ட் சைட்டில் பெட்டிங் செய்வதையும் அவதானித்தேன்.
அப்புறமாக நான் விளையாடப் போகும் போது மனைவிக்கு தெரியாமல் இவரையும் அழைத்துப் போய் விடுவேன்.கிரிக்கெட் ஆர்வம் வேணாம். படிப்பு கெட்டுடும்னு மனைவி திட்டுவாங்க.
ஒரு தடவை பாகிஸ்தான்  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாங்களும் பார்க்கச் சென்றிருந்தோம்.
அந்த நேரத்தில் இவர் மைதானத்தின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது.  இவர் துடுப்பாடுகின்ற விதம், பந்து வீசுகின்ற விதம் எல்லாவற்றையும் கூஞுணண் குணீணிணூtண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி இருந்தார்கள். நாங்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம். இதன் பிறகு தான் கிரிக்கெட் உலகின் அறிமுகம் எமக்கு கிடைத்தது.
இப்போது லிட்டில் சங்ககார என்கிற அளவுக்கு இவருக்கு புகழ் கிடைத்திருக்கிறது. எனது மகன் சங்ககார மாதிரி விளையாடுவதாக சொல்கிறார்கள். சங்ககாரவின் அத்தனை ஸ்டைலும் சாருஜனுக்கு தானாகவே வருகிறது.  சங்ககார பாணியில் இவர் விளையாடுவதை கண்ட பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்  டோனி கிரேக் இவருக்கு “லிட்டில் சங்ககாரசு எனப் பெயர் வைத்தார்.
மகனுக்கும் சங்ககாரவை ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் இவரை பிடிக்கும். சங்ககார அணித் தலைவர் பதவியிலிருந்து விலகும்போது சாருஜனுக்குத்தான் கடைசி கையொப்பமிட்டுள்ளார்.
சங்ககாரவை உங்களுக்கு ஏன் பிடிக்கும்? என சாருஜனிடம் கேட்டோம்.
அவர் நன்றாக விளையாடுவார். அவர் பெட்டிங் பண்ணுவது, கீப்பிங் பண்ணுவது பிடிக்கும். அதைவிட அம்பயர் அங்கிள் அவுட் காட்டினா ஒன்றும் சொல்லாம போய் விடுவாரு. ரொம்ப நல்ல அங்கிள். அதுமட்டுமில்ல சங்ககார அங்கிள் நல்லா விளையாடனும். நல்லா படிக்கனும்.
நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்று சொல்லியிருக்கிறார் என்றார் தன் மழழைக் குரலில்.
சாருஜனின் இன்னொரு பேவரிட்  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வோன். அதுமட்டுமல்ல சாருஜனுக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடுத்தபடியாக  அவுஸ்திரேலிய  அணியைத்தான் பிடிக்கும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மேற்கிந்திய அணியின் தலைவர் டெரன் செமி, கிறிஸ்கெய்ல், அதிரடி வீரர் கிரான் பொலக், சர்வான், இந்திய அணியின் தலைவர் தோனி, அதிரடி வீரர் விராட்கோலி. "ரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணியில் சயிட் அப்ரிடி, அஜ்மால் உட்பட  உலக  கிரிக்கெட் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார் சாருஜன்.
எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரை மட்டும் சாருஜன் இன்னும் நேரடியாக சந்திக்கவில்லை. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சாருஜனின் நீண்ட நாள் ஆசை.
அத்தனைப் புகைப்படங்களையும் அழகிய ஆல்பமாக செய்து வைத்திருக்கிறார் சாருஜனின் தந்தை சண்முகநாதன்.
கொட்டாஞ்சேனை சென்.பெனடிக் கல்லூரியில் முதலாம் தரத்தில் படிக்கிறார் சாருஜன். மேலதிகமாக கிரிக்கெட் பயிற்சியும் பெற்று வருகிறார்.
வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கிரிக்கெட் பயிற்சிக்காக செல்ல வேண்டும். மற்ற நாட்களில் அம்மாதான் கெஞ்சிக் கூத்தாடி அவரை எழுப்ப வேண்டும்.  கிரிக்கெட் பயிற்சி நடைபெறும் தினங்களில் அதிகாலையிலேயே எழும்பி விடுவார். எங்களையும் எழுப்பி விடுவார். அந்த அளவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கிறது சாருஜனுக்கு.
 இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும். நல்ல பெட்ஸ் மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சங்ககார மாதிரி வரவேண்டும். இதுதான் என் இலட்சியம் என்கிறார் சாருஜன்.
சாருஜனின் விருப்பம் எப்படியோ  அதற்கேற்ப அவரை உருவாக்குவோம் என்கிறார் சாருஜனின் தந்தை நம்பிக்கையோடு!
இலங்கை அணிக்கு ஒரு சிறந்த வீரர் உருவாகிறார்.சாருஜனை வாழ்த்தி விடைபெற்றோம்.