கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அருட் தந்தை த. சிறிதரன் சில்வெஸ்ரர் அடிகளார் நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். வெலிக் கந்தையில் நேற்று நடைபெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த வேளை வாழைச் சேனையில் வைத்து தீடிரென சுகவீனமுற்ற நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் மரணமடைந்ததாக ஆயரில்ல வட்டாரங்கள் தெரிவித்தன. மட்டக்களப்பு தாண்டவன்வெளியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் 1993 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருமலை, மூதூர் , கல்லாறு ஆகிய இடங்களில் குருவாகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 13 வருடங்களாக கிழக்கிலங்கை கத்தோலிக்க திருச் சபையின் சமூகப் பணி மையமாகிய கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் மட்டக்களப்பு அம்பாறை மவாட்டங்களின் இயக்குநராக பணியாற்றி வந்தார். 49 வயதுடைய அடிகளாருக்கு இந்தியாவின், பெங்களூர் நகரில் அமைந்துள்ள கல்வி முகாமைத்துவம் மற்றும் சமூக சேவைகள் என்னும் நிறுவகத்தின் சர்வோதயம் நியு டில்லி என்ற அமைப்பினால் கடந்த வருடம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட கற்றறிவாளர் விருது 2010 விழாவின் போது பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஆயர் இல்லத்திற்கு நிதிப் பொறுப்பாளராக நியமனம் பெற்றார். அருட் தந்தை சிறிதரன் சில்வெஸ்ரர் யுத்தம், கடல் கோள் மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களின் போது இன, மத பேதம் இன்றி பெருந்தொகையான மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றியவர். இதேநேரம் வெலிக் கந்தை உள்ளிட்ட இடங்களில் புனர்வாழ்வு முகாம்களில் உள்ள முன்னாள் போராளிகளின் நலன் மற்றும் அவர்களது விடயங்கள் குறித்து மிகவும் அக்கறைகாட்டினார். கடந்த நத்தார் புது வருடத்தை முன்னிட்டு வெலிக் கந்தை கந்தக்காடு சேனபுர என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புனர்வாழ்வு முகாமுக்கு இவர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து அங்குள்ள முன்னாள் போராளிகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக